சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இளங்கலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வு 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதிய நிலையில், 67787 தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வின்போது தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீட் தோல்வி பயம் காரணமாக மாணவ மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவந்த நிலையில், ஸ்வேதா இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தினால், ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.