தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று தொடங்கியது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 570 பேர் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். அதில், 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இன்று இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படும்.