ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த நிலையில், ராணி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இதில் மூன்று நாடுகளுக்கு மட்டும் பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்குத்தான் ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்புக் காரணமாக, ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்த பிரிட்டன் விரும்புகிறது. இதன் பொருட்டே ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையும் பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முயற்சியில்தான் ராணியின் இறுதி நிகழ்வில் ரஷ்யாவுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், ரஷ்யாவுக்கு துணையாக இருக்கும் பெலாரஸுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு குற்றத்திற்காக மியான்மர் நாட்டிற்கும், அதன் ராணுவத்துக்கும் பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதன் பொருட்டே மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 500-க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய பிரதமர்களுக்கு இறுதி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.