சென்னை, தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெற தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க பள்ளிகூடங்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்கவும், தனியார் பள்ளிகூடங்களை ஒழுங்குபடுத்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் உருவாக்க வேண்டும். மேலும், கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிட்டும் பள்ளிக்கல்வித் துறையை மறுசீரமைக்க அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை தமிழக அரசு ஆய்வு செய்த பிறகு பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), தனியார் பள்ளிகூடங்கள் இயக்குநரகம் ஆகியவற்றுக்கு தலா 1 துணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படுகிறது. இதுதவிர, புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 வட்டாரக் கல்வி அலுவலர்கள், 16 தனி உதவியாளர்கள், 86 கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருக்கும் இரண்டு இணை இயக்குநர் பணியிடங்கள் எஸ்சிஇஆர்டி மற்றும் தனியார் பள்ளிகூட இயக்குநரகத்துக்கு மாற்றி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகூடங்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகூடங்களை கண்காணிக்க தலா ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-ல் இருந்து 152 ஆக அதிகப்படுத்தபட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கு விரைவில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான அதிகாரமும், பணிகளும் திருத்தி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.