அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வருகிறது.
அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிராக கட்சியின் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் எடப்பாடி தரப்பினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.