கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே இருக்கும் பக்கிரிமானியம் நடுத்தெருவில் வசிப்பவர் சிங்காரவேல் மகன் சந்திரன் (57). இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் சுபாஷினி கல்யாணமாகி, விவாகரத்தாகி பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் சுபலட்சுமி தஞ்சையில் ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சந்திரன், சாப்பிட்டு விட்டு தனது வீட்டின் முன்பு இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த சிலர், சந்திரனின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சத்தம் கேட்டு கஸ்தூரி மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே சந்திரன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்தனர். அதில், சந்திரனுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி நிலப்பிரச்சினை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சந்திரன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் விவசாயி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.