மனைவியின் மருத்துவ செலவுக்காக பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை ரூ.50,000-க்கு தந்தை விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் பசப்பா (வயது 35). அந்த பகுதியில் ஹோட்டல் தொழிலாளியாக இருக்கும் இவருக்கு, திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், இருதய நோயால் அவதிப்படும் இவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை, மருந்து செலவு என அதிகமாக கடன் வாங்கி வைத்துள்ளார். எனவே, அந்த கடனை எப்படியாவது அடைக்க வேண்டுமென நினைத்த பசப்பா, தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை வேறொருவரிடம் விற்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி நாகவேணியிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையை கொடுக்க மாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார். இதனால், ஆவேசப்பட்ட பசப்பா தனது மனைவியிடம் சண்டையிட்டு, அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி கொடுமை செய்துவந்துள்ளார். இதனால், தனது மூத்த மகனை எண்ணிய நாகவேணி மனமே இல்லாமல் குழந்தையை விற்க சம்மதித்துள்ளார். பின்னர் அவர்கள் கலிபுரா என்ற பகுதியில் இருக்கும் ஒரு தம்பதியினருக்கு அந்த குழந்தையை விற்றுள்ளனர்.

மேலும், அவர் விற்பதற்கு முன்பு வெற்று பாத்திரத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் பசப்பா-நாகவேணி தம்பதியினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவையனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குழந்தையை பெற்று சென்றவர்களை தேடி வருகின்றனர். மனைவியின் மருத்துவ செலவுக்காக பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை ரூ.50,000-க்கு தந்தை விற்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.