திருவனந்தபுரம், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ஆம் வருடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ஆம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார், என்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக, மூத்த தலைவர்கள் சசிதரூர், திக் விஜயசிங், அசோக் கெலாட் போன்றோர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்தார்.
அதன்பிறகு, கேரளாவில் ராகுல்காந்தி நடத்தி வரும் ஒற்றுமை பயணத்தில் கெலாட் பங்கேற்றுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல்காந்தியிடம் கெலாட் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார். இதுகுறித்து அசோக் கெலாட் கூறுகையில்,
அனைவரின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும்படி ராகுல்காந்தியிடம் பல முறை நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், காங்கிரசின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரக்கூடாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்றார்.