இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதனையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது.
ஆனாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி இருக்கின்றன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டிடத்தின் அருகில் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார். இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய பகுதிகளிலும் இளைஞர்கள் பேரணி நடத்த முயற்சி செய்தனர். இதுதொடர்பாக நான்கு பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.