தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து, மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக்க திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். என பதிவிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவெடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை கோர்ட்டிலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணையாக இருப்போம் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.