சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
விழாக்காலங்களில் ரயில்வே நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம் , தாம்பரம் , காட்பாடி , செங்கல்பட்டு , அரக்கோணம் , திருவள்ளூர் , ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தீபாவளி ,கிருஸ்துமஸ் , ஆங்கில புத்தாண்டு பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில் நடைமேடைக் கட்டண உயர்வு வரும் ஜனவரி 31 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.