கடலூர் குழந்தை காலனியில் வசித்து வரும் சண்முகம் மகன் பாரதிதாசன் (30). இவர் ஒரு பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (55) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 20.8.2012 அன்று இரவு 8 மணி அளவில் பாரதிதாசனின் தம்பி பாண்டியராஜ், அந்த பகுதியில் இருக்கும் எல்லை மாரியம்மன் கோவிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மணிவண்ணனின் உறவினரான சங்கருடைய மகன்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (33), குசான் என்கிற ஆசைத்தம்பி (30) இரணடு பேரும் முன்விரோதம் காரணமாக பாண்டியராஜை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர், தனது அண்ணன் பாரதிதாசனிடம் சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து பாரதிதாசன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி மற்றும் அவர்களுடன் இருந்த மணிவண்ணன் ஆகியோரை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாரதிதாசனை குத்தினார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நீதிபதி சுபா அன்புமணி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஆசைதம்பிக்கு ஓராண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மணிவண்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.