உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு சென்று வந்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லால்தாங்கைச் சேர்ந்த 40 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் லால்தாங்கிற்கு செல்ல அதே பேருந்தில் திரும்பினர். சிம்டி என்ற கிராமத்திற்கு அருகே சாலையில் வந்து கொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேரிடர் குழுவுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு முழுவதும் நடந்த மீட்பு பணியில் 25 பேரை பிணமாக மீட்டனர். 21 பேர் படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி அசோக் குமார் கூறுகையில் முடிந்த அளவுக்கு நாங்கள் துரிதமான நடவடிக்கை எடுத்து காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் , ’’இதயத்தை பிளக்கும்’’ சோகமான சம்பவம் என குறிப்பிட்டிருக்கின்றார். ’’ உத்தரகாண்ட் மாநிலம் பவுரியில் நடந்த கோர விபத்து இதயத்தை உலுக்குகின்றது. துயரமான இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தைச் சுற்றியுள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கின்றேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்என்றார்.