தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் அவர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை நொடிப் பொழுதில் திருடி விடலாம்.
EPFO தனது உறுப்பினர்களிடம் ஒருபோதும் ஆதார், பான், UAN, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்களை ஒருபோதும் கேட்காது என்று கூறியுள்ளது. தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்களை யாராவது கேட்டால், கவனமாக இருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மோசடியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்காதீர்கள் எனவும் எச்சரித்துள்ளது.

இது குறித்து பிஎஃப் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை செய்துள்ளது. அதில், ”ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிருமாறு அதன் உறுப்பினர்களை ஒருபோதும் கேட்க மாட்டோம். EPFO எந்தவொரு சேவைக்கும் வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் எந்த தொகையையும் டெபாசிட் செய்யச் சொல்லி கேட்காது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
PF கணக்கில், மக்களின் பெரிய வருமானம் டெபாசிட் செய்யப்படுகிறது. அதை மக்கள் ஓய்வூதிய செலவுகளுக்காக டெபாசிட் செய்கிறார்கள். மோசடி செய்பவர்கள் அதை ஒரே அடியில் காலி செய்துவிடுகிறார்கள். இது மிகப் பெரிய இழப்பாகும். ஆன்லைன் மோசடியாளர்கள் ஃபிஷிங் தாக்குதல் மூலம் கணக்கிலுள்ள பணம் அனைத்தையும் திருடிவிடுகிறார்கள். உண்மையில், ஃபிஷிங் என்பது ஆன்லைன் மோசடியின் ஒரு பகுதியாகும். இதில் டெபாசிட் செய்பவர் ஏமாற்றப்பட்டு, அவர்களிடமிருந்து கணக்கு தொடர்பான தேவையான தகவல்கள் பெறப்பட்டு, கணக்கு முடக்கப்படும்.
எனவே, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது PAN எண், ஆதார் எண், UAN உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு ஏதேனும் ஃபிஷிங் அழைப்பு அல்லது செய்தி வந்தால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யலாம்.