விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு இருப்பதாகக் கூறி தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 23 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் தேசிய புலானாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பிஎஃப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
![நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் என்ஐஏ ரெய்டு..!! அதிர்ச்சியில் சீமான்..!! பறிமுதல் செய்யப்பட்டது என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/whatsapp-image-2022-10-07-at-11-41-49-am_710x400xt.jpg)
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை கல்லூரி சாலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விக்னேஸ்வரன் வீடு அமைந்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் தேசிய புலனாய்வு துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் விக்னேஸ்வரன் வீட்டில் திடீரென சோதனை செய்தனர். ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன், விடுதலை புலி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர்.
![நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் என்ஐஏ ரெய்டு..!! அதிர்ச்சியில் சீமான்..!! பறிமுதல் செய்யப்பட்டது என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/whatsapp-image-2022-10-07-at-11-42-18-am.jpg)
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சோதனை 8 மணியளவில் நிறைவு பெற்றது. சோதனையில், சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். பிஎஃப்ஐ அமைப்பினர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.