ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் நியாய விலை கடைகளில் அரிசி, கோதுமை, பாமாயில், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், அவ்வாறு விற்கப்படும் பொருட்கள், நிலையில் இருப்பதுடன் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பத்திரிகை செய்திகளை குறிப்பிட்டு, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் மேலாண் இயக்குனர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ’ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்வதையும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பொருட்களின் விலை வெளிச்சந்தை நிலையை விட குறைவாக இருக்க வேண்டும். மக்கள் வாங்கும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் முறையாக பில் வழங்க வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.