இந்தி திணிப்பு பற்றி பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக இந்தி படத்தை விநியோகிக்கின்றார் என்று தமிழக பா.ஜ . தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். 1965ல் இருந்து இதனை தமிழ்நாட்டில் பார்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக திமுக செய்த சாதனை, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளில் தமிழை கூட கட்டாய மொழியாக மாற்ற முடியவில்லை.
மும்மொழிக் கொள்கை அதற்கு கூட மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை தேவைப்பட்டது. ஆனால் அதைகூட ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திமுகவிற்கு இல்லை. காரணம் திமுகவினர் நடத்தக்கூடிய பள்ளியில் இந்தி இருக்கிறது. அதேபோல் மத்திய அரசு அலுவலர்கள் யாரேனும் இந்தியில் கடிதம் எழுதிவிட்டால் கூட அதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசின் துறைகள் ஏதேனும் தவறு செய்தால் கூட பூதாகரமாக்குகிறார்கள். மும்மொழிக் கொள்கை என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது.
இந்தி திணிப்பு இல்லை மூன்றாவதாக பிடித்த மொழியை கற்றுக் கொள்ளலாம் என்பது தான் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும், மாநில கொள்கையை உருவாக்கிக் கொள்கிறோம் என்று கிளம்பியுள்ளனர்திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களை வாங்கி வைத்து, இந்தி படத்தை தான் பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் திணிக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அனைத்து இந்தி படத்தின் உரிமைகளும் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்குவார். அதனால் பொய்யான வாதங்களை திமுக கைவிட வேண்டும். தமிழ், தமிழ் என்று கட்சியை தொடங்கியவர்கள், எதற்காக இந்தி படத்தின் விநியோகத்தை மிரட்டி வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.