தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்கப்பட்டது. தட்டாஞ்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சர்க்கரை, மைதா, ரவா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்களை ரூ.800-க்கு வரும் 24ஆம் தேதி வரை 8
நாட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ”பாப்ஸ்கோ சார்பில் நடைபெறும் சிறப்பு அங்காடிக்கு ரூ.3.5 கோடி மானியமாக அரசு வழங்கி உள்ளதாகவும், தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ
சக்கரைக்கான தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும்
அறிவித்தார். தொடர்ந்து ஆளுநர் மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை கேட்பது குறித்து
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மக்களின், குறைகளின்
கேட்கப்பட்டு அவை தீர்க்கப்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம்” என விளக்கமளித்தார்.