காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த பிளஸ்2 மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலனுக்கு விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புர மாவட்டம் கோசனகி கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதான மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. இவர் தனது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குரப்பா என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் மாணவியின் தந்தை குரப்பாவிற்கு தெரியவந்ததால், இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால், கடந்த 22ஆம் தேதி குரப்பாவின் பேச்சை மீறி இருவரும் தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். காதலியின் வீட்டிற்கு சென்ற ஜமகண்டி, நீண்ட நேரமாக தங்களது வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர். இதை பார்த்த பெண்ணின் தந்தை குரப்பா, தனது மகளை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் அந்த பெண் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகள் பிரிந்த வேதனையை தாங்க முடியாத குரப்பா, மகளின் காதலன் ஜமகண்டியை அழைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் வாயில் விஷத்தை கட்டாயப்படுத்தி ஊற்றி ஆணவக் கொலையும் செய்துள்ளார். தான் செய்த ஆணவக் கொலையை மறைப்பதற்காக பாகல்கோட்டையில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் இருவரின் உடலையும் சாக்கில் கட்டி தூக்கிப்போட்டுள்ளார். மர்ம பொருள் மிதந்து வருவதை கண்டு காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என இருவரது குடும்பமும் காவல்துறையில் புகார் அளித்தனர். அப்போது, கைப்பற்றபட்ட இளைஞரின் உடலை பெற்றோர் சட்டையின் உதவியுடன் உடலை அடையாளம் கண்டனர்.

வசதி படைத்த பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகனைக் கொன்றுவிட்டதாக இளைஞரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி, இது தொடர்பாக புகார் அளித்தனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் குரப்பாவிடம் குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது மகளின் காதலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, ஆணவக் கொலை செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் உடல் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.