அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அமைந்தகரை சேர்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தபெண் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், முருகானந்தத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அதிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், அதற்கான விசாரணை எழும்பூரில் உள்ள அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பருக் தீர்ப்பு வழங்கினார். அதில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.