போதைக்கு அடிமையாகி பணத்துக்காக தங்களை அடித்து துன்புறுத்திய மகனை, கூலிப்படைக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து பெற்றோரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கம்மம் நகரை சேர்ந்தவர் க்ஷத்திரிய ராம்சிங்- ராணிபாய் தம்பதி. ராம்சிங் அங்குள்ள தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு சாய்ராம் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான சாய்ராம், குடிக்க பணம் தருமாறு தினமும் பெற்றோரை தொல்லை கொடுத்துள்ளார். பணம் தராவிட்டால் அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகனின் தொல்லையை தாங்க முடியாத பெற்றோர் மகனை கொன்று விட்டால் நிம்மதியாக வாழலாம் என முடிவு செய்துள்ளனர். இது பற்றி மனைவி ராணிபாய் தனது தம்பி சத்திய நாராயணாவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சத்தியநாராயணா ராமாவத் ரவி என்ற கூலிப்படை ரவுடியை தொடர்பு கொண்டு, சாய்ராமை கொல்லும்படி 2 மாதங்களுக்கு முன்பு பேரம் பேசியுள்ளார். இதற்காக ரவி ரூ.8 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, நல்கொண்டா மாவட்டம், திரிபுராரம் அருகே கல்லேப்பள்ளியில் சாய்ராமை கொல்ல இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், கம்மத்தில் இருந்து சாய்ராமை சத்திய நாராயணாவும், ரவியும் காரில் கடந்த மாதம் 18ஆம் தேதி கல்லேப்பள்ளி மைசம்மா கோயில் அருகே அழைத்து வந்தனர். அங்கு ஏற்கனவே ரவி ஏற்பாடு செய்திருந்த நாகரா, சாய், ராம்பாபு ஆகியோர் காத்திருந்தனர்.

குடிபோதையில் இருந்த சாய்ராமை அவர்கள் தொண்டையில் நைலான் கயிற்றால் கட்டி இழுத்து கொன்றனர். பின்னர், சாய்ராமின் சடலத்தை காரில் எடுத்து சென்று சன்யாபஹாட் புறநகர் பகுதியில் உள்ள முசி ஆற்றில் வீசினர். கொலை செய்தவர்களுக்கு அதேநாளில் சாய்ராம் பெற்றோர் ரூ. 1.50 லட்சம் கொடுத்தனர். மீதித்தொகை ரூ. 6.50 லட்சத்தை கொடுக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் முசி நதியில் சடலம் இருப்பதை பார்த்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, கொலைகாரர்கள் சென்ற கார் பதிவாகி இருந்தது. விசாரணையின் போது, சாய்ராமின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காட்டினர்.

கடந்த 25ஆம் தேதி ஹூசூர்நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது. அப்போது, சிசிடிவியில் பதிவான காரில் சாய்ராமின் பெற்றோர் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், நேற்று முன்தினம் அவர்களின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். இதில், மகனை கொலை செய்ததை ராம்சிங், ராணிபாய் ஒப்புக் கொண்டனர். அவர்களையும், கொலை கும்பலை சேர்ந்த ரவி உட்பட 7 பேரை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளி தர்மா தலைமறைவாகி விட்டார். மகனை பெற்றோரே கூலிப்படையை ஏவி கொன்றது, தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.