தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது இன்று மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று தமிழகத்தில் அதி கனமழை பெய்வதற்கான ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், மதுரை, தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.