வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மாறக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் வட தமிழக கடலோர மாவட்டங்கள் காரைக்கால், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மற்றும் 22ம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லோசான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதுால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23ம் தேதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆரஞ்சு அலர்ட் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மிதமான மழைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளது.