பேஸ்புக் மூலம் பழக்கமான பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை, 7 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்டோ குரியன் (36). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கமான பெரும்பாவூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. பள்ளி மாணவியை கடத்தி லாட்ஜில் பலாத்காரம் செய்த பின்னர், சாலக்குடி ரயில் நிலையத்தில் விட்டு விட்டு தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜின்டோ குரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

6 மாதங்களுக்கு பிறகு ஜின்டோ குரியன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானார். இதையடுத்து ஜின்டோ குரியனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் ஒரு நிறுவனத்தில் ஜின்டோ பணிபுரிந்து வருவதாக பெரும்பாவூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.