காதல் விவகாரத்தில் ஒரு மாணவன், தனது கை, கழுத்தை கத்தியால் தனக்கு தானே கிழித்துக் கொண்டு பெண்கள் பள்ளிக்குள் புகுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அங்குள்ள அரசு விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவன், அங்கு புத்தகப்பையை வைத்துவிட்டு திடீரென மாயமானார். பின்னர், மதியம் வகுப்பறைக்கு வந்த மாணவர், திடீரென சிறிய கத்தியால் தனக்கு தானே கை, கழுத்து, உடம்பில் கிழித்து கொண்டு கதறினார். தொடர்ந்து பள்ளியை விட்டு வெளியே ஓடி சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள, சூளகிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்குள் சென்றார்.
![மாணவி ஏமாற்றியதால் ஆத்திரம்..!! அரசுப் பெண்கள் பள்ளிக்குள் புகுந்து கழுத்தை கிழித்துக் கொண்ட மாணவன்..!! பரபரப்பு](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Fake-love.jpg)
ரத்தம் சொட்ட சொட்ட குறிப்பிட்ட வகுப்பறை முன் நின்று கொண்டு ‘எனது காதலியை என்னிடம் பேச சொல்லுங்கள்’ என கூச்சலிட்டுள்ளார். அதனைக்கண்டு ஆசிரியர்கள், மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரை பிடிக்க சிலர் வந்தபோது, ‘யாராவது என் அருகில் வந்தால், கத்தியால் குத்திவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். பின்னர் பேரிகை சாலையில் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் கொடுத்த தகவலின்பேரில், சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், மாணவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
![மாணவி ஏமாற்றியதால் ஆத்திரம்..!! அரசுப் பெண்கள் பள்ளிக்குள் புகுந்து கழுத்தை கிழித்துக் கொண்ட மாணவன்..!! பரபரப்பு](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Police.jpg)
விசாரணையில், சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, அவர் காதலித்து வந்தது தெரியவந்தது. தற்போது, அந்த மாணவி வேறு ஒருவருடன் பழகி வருவதால், ஆத்திரத்தில் தன்னைத்தானே கத்தியால் கிழித்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.