மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், தற்போது மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு விதித்துள்ளது.