மகாராஷ்டிராவில் தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன் (54). இவர், கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கேக் வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார்.
சுடுகாட்டில் பெரிய பேனரும் வைக்கப்பட்டிருந்தது. கவுதம் கேக் வெட்டுவது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம், “சமூகத்தில் நிலவும் சூனியம் மற்றும் பேய் குறித்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே சுடுகாட்டில் வைத்து எனது பிறந்த நாளை கொண்டாடினேன்” என்று தெரிவித்தார்.