விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் அசீம் – விக்ரமன் பஞ்சாயத்து இல்லாத நாட்களே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற டாஸ்க்கில் அசீமை அட்டக்கத்தி என விக்ரமன் கூறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் குயின்ஷி வெளியேற இருக்கிறார். இந்நிலையில், அசீம், விக்ரமன், தனலட்சுமி, ஷிவின், மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமாக விளையாடி வருகின்றனர். இவர்களில் விக்ரமன் எப்போதும் நீதி, நேர்மை, நியாயம் என பேசி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முதல் அநீதியை தட்டிக் கேட்கும் ஒருவராக விக்ரமன் செயல்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் இவர், பெரும்பாலும் அசீம் உடன் மோதி வருவதை பார்க்க முடிகிறது. அசீமும் சக போட்டியாளர்களை ட்ரிகர் செய்து விளையாடுவதால், அவருக்கும் விக்ரமனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அதேநேரம், மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் விக்ரமன், தன்னைப் பற்றி யாரேனும் விமர்சித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. எந்த அடிப்படையில் அப்படி சொன்னீங்கன்னு அவர்களிடம் விவாதம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.

எப்போதுமே நேர்மையாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பேசும் விக்ரமன், அவர் மீதான விமர்சனத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை என ஹவுஸ்மேட்ஸ் நினைக்கின்றனர். ஷிவின் இந்த விமர்சனத்தை நேரடியாகவே விக்ரமனிடம் சொல்ல, அதற்கு அவர் டென்ஷன் ஆகிவிட்டார். அதேபோல், ஏடிகே, ராம் இருவரும் விக்ரமன் பாயிண்ட் பிடித்து பேசினாலும் செல்ஃபிஷாக விளையாடுகிறார் என தனியாக பேசிக் கொள்கின்றனர். அதேபோல், நேற்றைய தினம் நடந்த பூட்டு போடும் டாஸ்க்கில், விக்ரமன் அரசியல் செய்வதாக ஆயிஷா நேரிடையாகவே கூறிவிட்டார். இதனால், விக்ரமனும் டென்ஷனாகி அங்கிருந்து கோபத்துடன் சென்றார்.

அமுதவாணனை அசீம் அடித்துவிட்டதாக விக்ரமன் குற்றம்சாட்டிய நிலையில், நேற்று ஷிவினும் தனலட்சுமியும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஆனால், விக்ரமன் அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார். அசீம் என்றால் மட்டும் அவருக்கு கோபவம் வந்துவிடுகிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அசீமை அவர் அட்டக்கத்தி என சொன்னதும் கூட தனிநபர் தாக்குதல் என்பது மாதிரியாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில் #BoomerVikraman என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரமன் நேர்மையாகவே இருந்தாலும் அவருக்கு எதிரான இந்த #BoomerVikraman என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.