விரைவில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு தலைமைச் செயலகத்தில் பிரம்மாண்டமாக அறை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அண்மையில் மீண்டும் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் பலரும் தம்பி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சம்மதம் தெரிவித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவரை அமைச்சராக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்ற பின் அவருக்கென தனி அறை அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இப்பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது உள்ள அமைச்சர்களின் இலாக்காகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகராட்சித்துறை அமைச்சராக உள்ள கே.என் நேருக்கு கூடுதல் துறை ஒதுக்கப்படலாம் என்றும், வனத்துறை உள்ளிட்ட சில துறைகள் மாற்றப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.