கேப்டன் விஜயகாந்தின் ’ரமணா’ படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. அதாவது, நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என நோயாளியின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்ததால், உறவினர்கள் மருத்துவமனையில் சலசலப்பை ஏற்படுத்தினர்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக நோயாளியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 10 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.14 லட்சத்தை கட்டணமாக வசூலித்துள்ளது அந்த மருத்துவமனை. அதோடு நோயாளியை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் சோனிபட்டில் உள்ள FIMS என்ற தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் அலட்சியமாக இருப்பதாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். நோயாளியை அனுமதிக்கும் போது, நோயாளியின் மூளையில் நரம்பு வெடித்துவிட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் செயல்பாடுகள் மீது சில நாட்களுக்குப் பிறகு உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அனுப்புமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து தான் மருத்துவமனை நிர்வாகம் நோயாளி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசாரும், மருத்துவமனை நிர்வாகமும் உறவினர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்து வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.