கள்ளக்காதலனை பெண்ணின் உறவினர்கள் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கரூரில், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியளவில் பரபரப்பு இருக்காது. ஆனால், திடீரென கரூர் மேற்கு மட-வளாகம் பகுதியில் ஒருவரை, ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து, தரையில் வீழ்த்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அடி-உதைக்கு ஆளானவர் சேலத்தைச் சேர்ந்த சசி என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கரூரில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் பணியாற்று வந்துள்ளார். அப்போது, ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பவர், தமது தந்தையோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் வாங்க வந்தபோது பழக்கம் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன், 10 வயது மகன் ஆகியோரை மறந்து சசியுடன் நெருக்கம் பாராட்டிய வடிவுக்கரசி, கஷ்டப்பட்டு உழைத்து கணவன் அனுப்பிய பணத்தை, சசிக்கு வாரி வழங்கியுள்ளார். இதுதவிர, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ரூ.30 லட்சம் வரை பெற்று சசிக்கு கொடுத்த வடிவுக்கரசி, ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி கரூரில் சசியுடன் சேர்ந்து ஷவர்மா கடையும் ஆரம்பித்துள்ளார். இதையெல்லாம் தாமதமாக அறிந்த உறவினர்கள், ஈரோட்டில் இருந்து கரூருக்கு புறப்பட்டு வந்து, சசியை நடுரோட்டில் வைத்து நையப்புடைத்துள்ளனர். திடீரென ஒரு கும்பல் திரண்டு வந்து ஒருவரைத் தாக்குவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தவறான சேர்க்கையால் தாக்குதலுக்கு உள்ளாகி காயம்பட்டு கிடந்த சசியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.