இந்தியாவிலும் 3 பேருக்கு சீனாவின் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் சீனாவில் முதன் முறையாக 2019 டிசம்பர் முதல் கொரோனா மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளன. இந்நிலையில் தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மத்திய அரசு அவசர ஆலோசனை கூட்டத்தினை நேற்று கூட்டியது.

அதன்பிறகு சுகாதாரத் துறை அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில், அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். சீனாவில் தினமும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள் இன்றியும், படுக்கைகள் இன்றியும் நோயாளிகள் திணறி வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்கள் பரவி வருகின்றன.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவிலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.