தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி என்பது கட்டாயமாக அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மாநிலங்களுக்கு சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்க நிதி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பொழுது அவர்கள் பள்ளியில் சேர அதிகம் வாய்ப்புள்ளது என்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறையினர் ஒருங்கிணைந்து அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் பெஜ்ஜிங்கி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த 6 மாணவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதையறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவனின் வீட்டிற்கு சென்று பார்த்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார் என்பவர் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது மாணவனின் பெற்றோர் வறுமையின் காரணமாக தான் நவீனை பள்ளிக்கு அனுப்பவில்லை என விளக்கம் அளித்து மாணவனை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

அதனை கேட்ட ஆசிரியர் மாணவன் நவீனின் வீட்டிற்கு முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் உங்களின் வறுமை என்பது எப்பொழுதும் நீங்காது கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதனை கேட்ட நவீனின் பெற்றோர் நவீன் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டனர். நவீனை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்த ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமாரை அனைவரும் பாராட்டினர்.