சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் கோவிட் BF.7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், குஜராத் மற்றும் ஒடிசாவில் கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேச நாவடட்டம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியில் வசிக்கும் இந்த 40 வயது நபர், டிசம்பர் 23 அன்று சீனாவில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் அறிக்கையில், சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா இருப்பதை அடுத்து, அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறியும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் மரபணு வரிசைப்படுத்தலுக்காக அவரது மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், இதுவரை, அந்த நபருக்கு கோவிட் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா அதிகம் பரவி வருவதால், இந்திய அரசு முழு எச்சரிக்கை நிலையில் உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் இருக்க அரசு ஏற்கனவே பணிகளை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.