தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ராகுல் காந்தி மனம் திறந்து பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்” என பாசத்துடன் உருகினார். அப்போது அவரிடம், “அப்படியெனில், இந்திரா காந்தியை போன்ற ஒரு பெண் வந்தால், திருமணம் செய்து கொள்வீர்களா”? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது” என்ற பதில் அளித்தார்.

தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் ’பப்பு’ என்ற பெயரை வைத்து ராகுலை அழைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, “நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன். நீங்கள் என்னை தவறாக நடத்தலாம், ஏன் என்னை அடிக்கவும் செய்யலாம். நான் உங்களை வெறுக்க மாட்டேன். என்னை ’பப்பு’ என்று அழைக்கிறார்கள் என்றால் அது ஒரு பிரசாரம். அவர்கள் தங்களுக்குள் இருக்கிற பயத்தால் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் எனக்கு இன்னும் பல பெயர்களை வைக்கலாம். நான் கவலைப்படவில்லை. நான் நிம்மதியாகவே இருக்கிறேன்” என பதில் அளித்தார்.
இதுதொடர்பான நேர்காணலை தனது யூடியூப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.