அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இந்திய தம்பதி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயணா தனது மனைவி மற்றும் 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். நாராயணாவுடன் சேர்த்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்திருந்தது. அப்போது, குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயணா, மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் ஆகிய 3 பேரும் உறைந்த ஆற்றின் மேல் நடந்துச் சென்றுள்ளனர்.

புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 பேரும் உறைந்த ஆற்றின் மீது நடந்த போது திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் அந்த உறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர். பின்னர், மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.