நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகனின் மனைவி பவித்ரா வயது 26. கர்ப்பிணியான இவர், பிரசவ வலி காரணமாக கடந்த 29ஆம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அதன்படி 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பவித்ரா அனுமதிக்கப்பட்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பவித்ராவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுத்தனர். இதில் பவித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தை அப்போதே இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் பொது பவித்ராவிற்கு மூச்சு திணறல் அதிகம் ஏற்பட்டதால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
மரணமடைந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் பவித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பவித்ராவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பவித்ராவை சாதாரண வார்டில் பெட்டில் வைத்து அறுவை சிகிச்சை செய்ததாகவும், புத்தாண்டு என்பதால் மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலையில் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்தததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் ஏற்கனவே காடம்பாடி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். இந்த திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் நிச்சயம் மரணம் உறுதி என வேதனையுடன் கருத்தும் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.