பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல் பண்டிகை. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஒரு வார விடுமுறையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால், சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டு சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில், ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடு கிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,000 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.