நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழா இன்று நடைபெறுகிறது. ஹெத்தையம்மன் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி,ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகை அன்று விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதே சமயம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21ஆம் தேதி, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.