மகாராஷ்டிராவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் வாட்ஸ்அப் அட்மினை தாக்கி அவரது நாக்கை அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் புனே ஃபர்சுங்கி பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் டிசம்பர் 28ஆம் தேதி இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ’ஓம் ஹைட்ஸ் ஆபரேஷன்’ என்ற பெயரில் அங்கு குடியிருக்கும் நபர்களை வைத்து வாட்ஸ்அப் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் இருக்கும் நபர்கள் பேசிய உரையாடலால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அட்மின் அந்த குறிப்பிட்ட நபரை நீக்கியுள்ளார். இதனால், கோபமடைந்த நீக்கப்பட்ட நபர் குழுவில் இருந்து தன்னை நீக்கியது ஏன் என்று வாட்ஸ்அப் மெசேஜில் கேட்டுள்ளார்.

அட்மின் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் மேலும், கோபமடைந்த அந்த நபர் அவரை சந்திக்க விரும்புவதாக கூறி அவர் இருக்கும் இடத்திற்கு 5 பேர் கொண்ட கும்பலுடன் வந்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அட்மின், நாக்கு அறுபட்டு தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அட்மினின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.