திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் வாரிசுகள் அதிகாரப் போட்டியில் இருந்து மு.க.அழகிரி விலகிவிட்டார். இதனால் மு.க.ஸ்டாலின் போட்டியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினுக்கும் போட்டி இருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. எந்த நேரத்திலும் போட்டியாக கனிமொழி முன்வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது என்று அக்கட்சியினரே தெரிவித்துள்ளனர். அதற்கேற்றார் போல் கனிமொழியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். இன்று, திமுக எம்பி கனிமொழி பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கே. மோகன் சார்பில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பெரியார், அண்ணா, கலைஞர், முக.ஸ்டாலின் ஆகியோர் கனிமொழியை நாற்காலியில் அமர வைத்து பெருமிதம் கொள்கிறார்கள். கனிமொழி கையெழுத்து போட கலைஞர் பேனா எடுத்துக் கொடுக்கிறார். இதன் பின்னணியில் தலைமைச் செயலகம் உள்ளது. இதனால் கனிமொழியை முதலமைச்சரை போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது ‘முதல்வர் நாற்காலி’ என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. இது திமுகவில் கிளர்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று விமர்சித்துள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.

ஆனால் அந்த போஸ்டரில், கனிமொழி அமர்ந்திருக்கும் மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை உதயநிதி அமைச்சராகிவிட்டதால் கனிமொழியும் அமைச்சர் பதவியை வகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மோகன் அப்படி ஒரு போஸ்டரை வடிவமைத்து இருக்கிறாரா? என்று தெரியவில்லை. மாநில அரசியலில் வாரிசு போட்டி வரக்கூடாது என்பதற்காகத்தான் கனிமொழியை டெல்லி பக்கம் அனுப்பி வைத்திருக்கிறது ஸ்டாலின் குடும்பம் என்ற ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த போஸ்டரில், ‘புறம் காத்தது போதும் அகம் காக்க வா’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

கனிமொழியை டெல்லி அரசியலுக்கு தள்ளிவிட்டாலும் கூட அவர் மாநில அரசியலைத்தான் விரும்புகிறாரோ என்கிற கேள்வியும் கனிமொழியின் ஆதரவாளரின் போஸ்டர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வருங்கால முதல்வரே… என்றும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.