ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் .
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை, ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்தச் செயல்களும் அனுமதி கிடையாது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி. இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.