சித்தோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் மீது திமுக கவுன்சிலர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் திமுக 1-வது வார்டு கவுன்சிலர் கோவேந்திரன். இவர் சித்தோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகிலேயே அர்ஜூனன் என்பவரின் ஹோட்டலும் செயல்பட்டு வருகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டியால் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை காரில் வந்த கோவேந்திரன், அர்ஜூனனின் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். இதில், கடையின் முன் பகுதியில் இருந்த ப்ரிட்ஜ் மற்றும் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, உண்மைத் தன்மையை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சித்தோடு போலீசாருக்கு உத்தரவிட்டார். தொழில் போட்டி காரணமாக திமுக கவுன்சிலர் கோவேந்திரன் செய்துள்ள இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.