விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
2014ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இரண்டு திரைப்படத்தின் ட்ரெய்லர்களும் வெளியான நாள்முதலே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி இரவு முதலே திரையரங்கு வாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், திரைப்படத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. வாரிசு திரைப்படம் வெளியாவதை அடுத்து பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஆங்காங்கே கலவரம் வெடித்தது. பேனர்களை கிழித்து விஜய், அஜித் ரசிகர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.