பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் திட்டத்தை கடந்த 1975ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாத வருமானம் சென்னையில் ரூ.25,000-க்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000-க்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் வரை அரசு விடுதியில் தங்கியிருக்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை, தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் விடுதியில் தங்குவதற்கான காலம் நீட்டிக்கப்படும். சென்னையில் மாத வாடகையாக ரூ.300 செலுத்த வேண்டும். இதர மாவட்டங்களில் ரூ.200 செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும், திருச்சியில் 2 விடுதிகளும் உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சை, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், நெல்லை, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, சென்னை போன்ற பெரு நகரங்களில் குறைவான சம்பளத்தில் பணிபுரியும் பெண்கள், இந்த விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகையாக மாதந்தோறும் வெறும் ரூ.300 செலுத்தி, உங்கள் சம்பள பணத்தை சேமித்துக் கொள்ளலாம். விடுதியின் முகவரியை, அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.