’லவ் டுடே’ திரைப்பட பாணியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனை கொடுத்த இளைஞர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள வேலூர் மாதா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது, லவ் டுடே திரைப்படம் பற்றியும் அவர்கள் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரும் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்வோமா? என அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி, இருவரும் 2 வாரக்காலத்திற்கு அவரவர் செல்போன்களை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர்.
![’லவ் டுடே’ திரைப்பட பாணியில் செல்போன்களை மாற்றிக் கொண்ட ஜோடி..!! பாய்ந்தது போக்சோ வழக்கு..!! நடந்தது என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Love-Today-1024x441.jpg)
இதையடுத்து, அரவிந்தின் செல்போனில் என்னென்ன புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கிறது என்பதை அலசி பார்த்துள்ளார் அந்தப் பெண். அப்போது அவர் பார்த்த வீடியோ அவரை அச்சத்தில் உறையச் செய்தது. அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நிர்வாணக் கோலத்தில் இருந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் அரவிந்தின் குரல் கேட்டுள்ளது. இதனால் அரவிந்த் தான், இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்பதை அப்பெண் உறுதி செய்தார். பின்னர், தான் இந்த வீடியோவை பார்த்ததை அரவிந்திடம் அப்பெண் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், கடந்த வாரம் இரவு வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை, போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில், அந்த வீடியோவில் உள்ள 10ஆம் வகுப்பு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அவரை பலாத்காரம் செய்ததை அரவிந்த் ஒப்புக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.