மணமகனுக்கு 10 ரூபாய் நோட்டை எண்ணத் தெரியவில்லை எனக் கூறி மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்த ரீட்டா சிங் என்ற பெண் கடைசி நேரத்தில் தன்னுடைய திருமணத்தை நிறுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். திருமணத்துக்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளையின் நடத்தை வித்தியாசமாக இருந்ததைக் கண்ட திருமண புரோகிதர் (Priest) பெண் வீட்டாரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். இதையடுத்து, மணமகனுக்கு டெஸ்ட் வைக்க உடனடியாக பெண் வீட்டார் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, மணமகனிடம் 30 ரூபாய்க்கான மூன்று 10 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை எண்ணச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த மணமகனால் ஒழுங்காக எண்ண முடியாமல் திணறி ஒருவழியாக எண்ணி முடித்திருக்கிறார்.
இதனைக் கண்ட மணப்பெண்ணும் அவரது வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அடுத்த நொடியே திருமணத்தை நிறுத்தும் வகையில் மணப்பெண் மணமேடையை விட்டு எழுந்துச் சென்றுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் மணப்பெண் ரீட்டாவின் சகோதரர் மோஹித், ‘இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவர் தெரிந்தவர் என்பதால் நல்ல நம்பிக்கையுடனேயே திருமணத்தை நடத்த திட்டமிட்டோம். ஆனால், மணமகனின் செய்கை வித்தியாசமாக இருப்பதாக priest கூறிய பிறகே அவரை சோதித்து பார்த்தோம். 10 ரூபாய் நோட்டையே அவரால் எண்ண முடியவில்லை என தெரிந்ததும் மனதளவில் பலவீனமாக இருப்பவரை திருமணம் செய்துகொள்ள ரீட்டா மறுத்துவிட்டார்.’ எனக் கூறியிருக்கிறார். இதனால் இரு தரப்பு வீட்டாருக்கும் இடையே வாய்த்தகராறு வெடித்திருக்கிறது.