மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
![#Breaking..!! மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம்..!! இறுதி தேதி எப்போது தெரியுமா..? அமைச்சர் அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-28-at-2.49.04-PM1.jpeg)
இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரை இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக ஆதாரை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.