அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, முதலில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணிபுரியும் வகையில், அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுகின்றனர். இதில், சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற செயல்முறை முன்பு இருந்தது. இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் முதலில் ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும். பின்னர் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, கடைசியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 200 இடங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் தற்போது அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.