மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது “ டிசம்பர் 2022க்கான நுகர்வோர் விலை குறியீடு ஜனவரி 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு 4% இருக்கும்.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும். நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தனது வருவாய் தாக்கத்துடன் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும்.” என்று தெரிவித்தார்
இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

இதனிடையே மார்ச் 8 ஆம் தேதி ஹோலிக்குப் பிறகு, மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவான ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக உள்ளது. ஆனால் ஊழியர்கள் இப்போது ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றனர். இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி உயர்வு என அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது..